ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தாமதம் செய்வது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி விடுவிப்பது குறித்து, மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இது அனுப்பப்பட்டு 45 நாள்கள் ஆகியும் அதன் மீது ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காதது நியாயமல்ல.
அமைச்சரவை தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு 7 பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பிக்கலாம் அல்லது அமைச்சரவை தீர்மானத்தை ஏற்க முடியாது என்று கூறி மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி வைக்கலாம். இந்த இரண்டில் ஒரு முடிவை எடுக்க ஆளுநருக்கு அதிகபட்சம் ஒரு வாரம் போதுமானதாகும்.
குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்து தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதை வைத்துக் கொண்டே 7 பேர் விடுதலையைத் தாமதம் செய்வதை ஏற்க முடியாது.
எனவே, 7 பேரையும் விடுதலை செய்வதற்கான ஆணையை ஆளுநர் விரைந்து பிறப்பிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.