தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலைச் சின்னம் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவர் வேறு அமர்வுக்குச் சென்றதால் வழக்கு விசாரணை நவம்பர் 2ஆம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இரண்டாவது எதிர் மனுதாரரான மதுசூதனன் சார்பில் வழக்குரைஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி, அதிமுகவின் தற்காலிகப் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா நியமனத்தை அங்கீகரிக்கும் வகையில் அவரது பெயரை தேர்தல் ஆணையம் கடிதத் தொடர்புகளில் குறிப்பிடவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட வி.கே. சசிகலா, டிடிவி தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக குறுக்கு வழியில் நியமித்தார். அதிமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்தான் என்பதை தேர்தல் ஆணையம் எந்த இடத்திலும் அங்கீகரிக்கவில்லை என்று வாதிட்டார். அவரது தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் விசாரணை அக்டோபர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்படவும் இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால், இந்த அமர்வில் இருந்த நீதிபதி சங்கீதா தீங்க்ரா ஷெகல் வேறு அமர்வுக்குச் சென்றிருந்ததால் வழக்கு விசாரணை நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னணி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின்அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அந்த உத்தரவை செல்லாதென அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.