எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தினர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.
அப்போது மாணவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியது: ஒரு சிலர் தங்கள் வாக்குகளை விற்பதினால், ஊழலின் பாரம் அனைவரின் மேலும் விழுகிறது. வாக்குகளை விற்பதினால் ஏற்படும் தீமை குறித்து மாணவர்கள்தான் மற்றவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அரசியல்வாதிகள் என்னிடம் என் அரசியல் அனுபவம் குறித்து கேட்கிறார்கள். 40 ஆண்டுகளாக என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை கோட்டையில் இருந்தே எனக்கு அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. பிற அரசியல் கட்சிகள் செய்த தவறுகளை மநீம செய்யாது.
உடற்பயிற்சி செய்து உடலை பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அந்த அளவு நாட்டைக் கட்டமைப்பதும் முக்கியம் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் சூழலைப் புரிந்து, எது தவறாகத் தோன்றுகிறதோ அதை மாணவர்கள் மாற்றுவதற்கான வலிமையைக் கொள்ள வேண்டும் என்றார்.
தனித்துப் போட்டி: பின்னர், கமலுடனான கலந்துரையாடலின்போது, மநீம எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். சென்னை கோட்டூர் நரிக்குறவர் முன்னேற்றச் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.