தமிழ்நாடு அரசு செவிலியர் பயிற்சி பொதுத் தேர்வில், நாகை மாவட்ட அரசினர் தலைமை மருத்துவமனை செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியர் 2 பேர், மாநில அளவில் முதலிடம் மற்றும் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில், தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட செவிலியர் பயிற்சிக்கான பொதுத் தேர்வில் தமிழக அளவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியர் பங்கேற்றனர்.
இதில், நாகை மாவட்ட அரசினர் தலைமை மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவி ஜி. சினேகா 600-க்கு 525 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். இப்பள்ளி மாணவி வி. கஸ்தூரி 519 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.
மாநில அளவில் சிறப்பிடம் மாணவியர் ஜி. சினேகா, வி. கஸ்தூரி ஆகிய 2 பேரையும், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் சந்தித்த ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், அவர்களைப் பாராட்டி, வாழ்த்தினார்.
மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மகேந்திரன், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் (பொறுப்பு) எம். சாந்தி மற்றும் ஆசிரியைகள் உடனிருந்தனர்.