மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட 17 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை அயனாவரத்தில், பள்ளி மாணவியான 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஆப்ரேட்டர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் உள்ளிட்ட பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுகுறித்து அவரது பெற்றோர், அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜுலை 15 -ஆம் தேதி புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்த அயனாவரம் பங்காரு தெருவைச் சேர்ந்த ரா. ரவிகுமார் (56), அதேப் பகுதியைச் சேர்ந்த அ.ராஜசேகர் (40), நா. அபிஷேக் (23), ஜி.சுகுமாறன் (60), கு.முருகேசன் (54), நா.பரமசிவம் (60), அ.ஜெய்கணேஷ் (23), ப.தீனதயாளன் (50), ஜோ.ராஜா (32) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோன்று கொளத்தூரைச் சேர்ந்த ம.சுரேஷ் (27), பா.குணசேகரன் (55), பெரம்பூர் நீல்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த அ.எர்ரோல் பிராஸ் (58), ஓட்டேரி எஸ்.வி.எம்.நகரைச் சேர்ந்த நா.பாபு (36), புளியந்தோப்பைச் சேர்ந்த நா. பழனி (40), ஏ. சூர்யா (23), கொடுங்கையூர் நரசிம்மன் நகர் 3 -ஆவது தெருவைச் சேர்ந்த ஆ.உமாபதி (42), வியாசர்பாடி 8 -ஆவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்த ஆ.உமாபதி (42) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் கைது: இந்நிலையில், 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய, அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதனிடம் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின்படி 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 17 பேரிடமும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு புதன்கிழமை வழங்கப்பட்டது.