ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
அமாவாசை நாள்களில் பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து, ராமேசுவரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி வழிபாடு நடத்துவர்.
குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை, சிவராத்திரி போன்ற நாள்களில் ராமேசுவரத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
இந்நிலையில் ஆவணி மாத அமாவாசை விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வந்ததால் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ராமேசுவரத்தில் அதிகாலையிலேயே குவிந்தனர்.
அக்னி தீர்த்தக் கரையில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், கடலில் புனித நீராடியும் வழிபாடு நடத்தினர்.
இதனையடுத்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி, சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
அதிகளவில் பக்தர்கள் வாகனங்களில் வந்ததால் ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.