எலிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கேரள எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் எலிக் காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ்' நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கோவை மாவட்டம் கொண்டம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற 28 வயது ஓட்டுநர், திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த 50 வயது அங்கன்வாடி பணியாளர் காந்திமதி ஆகியோர் கடந்த சில நாள்களில் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர மேலும் பலர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் எலிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்குச் சென்று திரும்பியவர்களுக்குத்தான் இந்த நோய் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
விழிப்புணர்வு இல்லாமை: எலிக் காய்ச்சல் நோயால் இருவர் உயிரிழந்ததற்கு காரணம், நோயின் கடுமை என்பதைவிட, இந்தக் காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை.
எனவே, தமிழகம் முழுவதும் எலிக் காய்ச்சல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.