போதையில் தகராறு செய்த கணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி, பழனிசாமி நகரைச் சேர்ந்தவர் ஞானம் (45), ஓட்டுநர். இவருக்கு உமாதேவி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஞானம் கடந்த சில மாதங்களாக சம்பாதிக்கும் பணத்தை வீட்டுக்குத் தராமல் மது அருந்துவதற்கு செலவழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்துவந்துள்ளார்.
இந்நிலையில், அவர் வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திவிட்டு மனைவியிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியபோது ஞானம் தனது மகனைத் தாக்கியுள்ளார். பின்னர் அவர் தூங்கச் சென்றுவிட்டார். போதையில் தூங்கிக் கொண்டிருந்த ஞானம் தலையில் அவரது மனைவி உமாதேவி கிரிகெட் மட்டையால் தாக்கியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த ஞானம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீஸார் வந்து ஞானத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உமாதேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.