மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்தின் திங்கள்கிழமை கூறியது:
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சி தற்போது மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இந்த மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் .
தஞ்சாவூரில் 110 மி.மீ.: திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூரில் 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் புழல், தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் தலா 70 மி.மீ., பெரம்பலூர் மாவட்டம் வேம்பவூர், திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் தலா 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.