முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பதிவான சிசிடிவி காட்சிகள் தங்களிடம் இல்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பெற்றபோதும் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஒப்படைக்குமாறு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடந்த 6-ஆம் தேதி ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆணையத்தில் கடந்த 11-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி சர்வர்களில் ஒரு மாதம் முதல் 45 நாள்கள் மட்டுமே பதிவான காட்சிகளை சேமிக்க முடியும். புதிய காட்சிகள் பதிவாகும்போது, பழைய பதிவுகள் தானாக அழிந்து விடும். இதன் காரணமாக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பெற்றபோதும் பதிவான சிசிடிவி காட்சிகள் தங்களிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநரின் செயலர், தலைமைச் செயலருக்கு கடிதம்: ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பி ஆளுநரின் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. ஆளுநரின் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ஜெயலலிதாவின் உடல்நிலை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், ஆளுநர் மாளிகை அதிகாரிகள் இடையே ஏதேனும் தகவல் பரிமாற்றம் நடைபெற்றதா?
அப்படியிருந்தால் அதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்பன போன்ற கேள்விகள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தலைமைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த 5 அரசு மருத்துவர்கள் அடங்கிய குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்ததா?.
ஜெயலலிதா உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் அரசுக்கோ, ஆளுநருக்கோ, மத்திய அரசுக்கோ, பொறுப்பு முதல்வருக்கோ அப்போதைய தலைமைச் செயலர் அறிக்கை அளித்தாரா? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.