பவானி ஆற்றைக் கடக்கும்போது புதன்கிழமை நீரில் மூழ்கி இரு பெண்கள் உயிரிழந்தனர். அப்போது, நீரில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு பெண்ணின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆலத்துக்கோம்பை காலனியைச் சேர்ந்த சரசாள், மல்லிகா, பெரிய அம்மணி, வசந்தா உள்பட 13 பெண்கள் புதன்கிழமை அங்குள்ள பவானி ஆற்றைக் கடந்து அரியப்பம்பாளையத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு நடவுப் பணியை முடித்துவிட்டு மீண்டும் 13 பேரும் வீடு திரும்ப ஆலத்துக்கோம்பை பவானி ஆற்றைக் கடந்தனர்.
13 பெண்களும் ஒருவருக்கொருவர் கையைப் பிடித்தபடி ஆற்றைக் கடந்தபோது நீரின் வேகம் காரணமாக அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில், நீச்சல் தெரிந்த 9 பேர் பத்திரமாக கரைக்கு வந்து சேர்ந்தனர். தகவலறிந்து அங்கு வந்த கிராம மக்கள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மல்லிகாவை மீட்டனர்.
அதைத் தொடர்ந்து, நீரில் மூழ்கிய சரசாள், பெரிய அம்மணி ஆகியோரை தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை சடலமாக மீட்டனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட வசந்தா என்ற பெண் மாயமானார். புதன்கிழமை இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை. மீனவர்கள் பவானி ஆற்றில் வியாழக்கிழமை தேடியபோது வசந்தா இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.