கரூரில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை கல்குவாரி உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்திற்குள்பட்ட க.பரமத்தி, பவித்திரம், தென்னிலை, தோகைமலை வட்டாரங்களில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனை நடத்தி வரும் உரிமையாளர்களில் சிலர் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, திருச்சி வருமானவரித்துறை அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழுவினர் 4 பிரிவுகளாக சடையம்பாளைம் கற்பகவிநாயகா புளுமெட்டல், காருடையாம்பாளையம் பொன்விநாயகா புளுமெட்டல், காட்டுமுன்னூர் திருமுருகன் புளுமெட்டல்ஸ், பாலவிநாயகா புளுமெட்டல், குரும்பபட்டி முருகன் புளுமெட்டல்ஸ் ஆகிய குவாரிகள் செயல்படும் இடங்களில் வியாழக்கிழமை சோதனையிட்டனர்.
தொடர்ந்து, கரூரில் கோவைச் சாலையில் உள்ள பொன்விநாயகா புளுமெட்டல்ஸ் உரிமையாளர் பொன்னுசாமி வீடு, அலுவலகம் மற்றும் இதர குவாரிகளின் உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கல் சோதனையிடப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் இந்தச் சோதனை நீடித்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
திருக்காம்புலியூர் ரவுண்டானாவில் உள்ள குவாரி உரிமையாளர்களுக்குச் சொந்தமான ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் நிறுவனங்கள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல, பவித்திரம், தென்னிலை பகுதிகளில் உள்ள குவாரிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.