சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷா.சாஹல் கோர்மத் (23). இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் கடல்சார் தொழில்நுட்பவியல் ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்குள்ள ஜமுனா விடுதியில், தங்கியிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை சாஹில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடந்தார்.
தகவலறிந்த கோட்டூர்புரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாஹில் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில், சாஹல் கோர்மத் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி வரை நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்ததும், அதன் பின்னரே தனது அறைக்கு சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் அதன் பின்னர், சாஹல் கோர்மத் தற்கொலை செய்திருக்க வேண்டும் என காவல்துறை கருதுகின்றனர். மேலும், சாஹல் வருகைப் பதிவேடு குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகம், அவரது பெற்றோருக்கு அண்மையில் ஒரு கடிதம் அனுப்பியதும், அந்தக் கடிதத்தைப் படித்து பார்த்த பெற்றோர் சாஹல் கோர்மத்தை கண்டித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே குடும்பப் பிரச்னையால் சோகத்துடன் நிலையில் காணப்பட்டாராம். இந்தக் காரணங்களால் சாஹல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.