தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் 2-ஆவது நாளாக சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் செல்ல போலீஸார் தடை விதித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனை பகுதியில் கடந்த 2 நாள்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அரிச்சல்முனைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல போலீஸார் 2-வது நாளாக தடைவிதித்துள்ளனர். தற்போது சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கம்பிப்பாடு வரையில் செல்ல அனுமதி மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அரிச்சல்முனை. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனைக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்று அடிக்கடி அரிச்சல்முனை செல்வதற்கு தடை விதிப்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அதனால் ராமேசுவரம்-தனுஷ்கோடி சாலையின் நுழைவு வாயில் பகுதியிலே அரிச்சல்முனைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிப்பது தொடர்பான அறிவிப்புப் பலகை வைத்துவிட்டால், தேவையற்ற அலைச்சல் மற்றும் ஏமாற்றத்தை தவிர்க்கலாம் என சுற்றுலாப்பயணிகள் தெரிவித்துள்ளனர்.