பணி நிரந்தரம், நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத் தலைமை அலுவலகம் முன் ஒப்பந்த ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் அந்தந்தப் பகுதிகளில் மின்வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மின்கம்பங்கள் நடுதல், மின் மாற்றிகளை அமைத்தல், சென்னை போன்ற பெருநகரங்களில் தரையைத் தோண்டி மின் கேபிள் புதைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கினாலும் வாரியம் நிர்ணயித்த ரூ.380 அளவுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னையில் 1,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தினக்கூலி ரூ.380 வழங்கப்பட வேண்டும். அடையாள அட்டை வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனால் நிர்வாகம் இதற்கு செவி சாய்க்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூறினர்.