முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் (83), உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகர் மயானத்தில் சனிக்கிழமை (ஏப். 21) மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 1935-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்த டி.வி.வெங்கட்ராமன், 1958-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். கோவையில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய அவர், தமிழக அரசிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றினார். வட ஆற்காடு மாவட்டத்தின் ஆட்சியராகவும், சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவராகவும், வருவாய்த் துறை ஆணையாளர், உள்துறைச் செயலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஜூன் 25-இல் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தார். 1993-ஆம் ஆண்டு நவம்பர் 30-இல் பணி ஓய்வு பெற்றாலும், ஆறு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. அவர் 1994-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
திருமந்திர செல்வர்: திருமந்திரம், திருவாசகம் போன்றவற்றில் புலமை பெற்றவராக திகழ்ந்தார். திருமந்திரத்துக்கான உரையை எழுதியுள்ளார். அவை குறித்து பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். இந்திய புராணங்களை எடுத்துரைக்கும் ஹம்சா அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார்.
இன்று இறுதிச் சடங்கு: அவரது இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அவரது மகன் வி.ராம்குமார் தெரிவித்தார். தொடர்புக்கு...9841273234.