மதுரை : மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் வேண்டுகோளை அடுத்து ஜாக்டோ ஜியோ போராட்டம் வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்படுவதாக, அந்த அமைப்பின் நிர்வாகிகள் உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற உள்ள ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி மதுரைக் கிளையில் லோகநாதன் என்பவர் சார்பில் இன்று காலை முறையீடு செய்யப்பட்டது.
டிசம்பர் 10ம் தேதி அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்று தனது மனுவில் லோகநாதன் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால், அதோடு சேர்த்து இன்று மதியம் விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
சென்னையில் தொடரப்பட்ட முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், மதுரைக் கிளையில் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அப்போது இந்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையினை விரைவில் சமர்ப்பிப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்தை வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்க இயலுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து விட்டு தெரிவிப்பதாக, ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதன்படி மதியம் 1.30 மணியளவில் ஆஜரான ஜாக்டோ ஜியோ அமைப்பின் வழக்கறிஞர், உயர் நீதிமன்றக் கிளையின் வேண்டுகோளை அடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் வரும் திங்கள்கிழமை வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து தமிழக அரசை வரும் 10-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது .