வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றங்கரையில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்காளர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் பேராசிரியர்கள் க.மோகன்காந்தி, வ.மதன்குமார், காணிநிலம் மு.முனிசாமி, தொலைதூரக் கல்வியின் துணை இயக்குநர் ஜமுனா தியாகராஜன், தொல்லியல் அறிஞர்கள் பூங்குன்றன், ம.காந்தி ஆகியோர் வாணியம்பாடி அருகே மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்காளர் சிலை ஒன்றைக் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியது: இந்தச் சிலையில் உள்ள நான்கு கைகளில் இரண்டு கைகள் உடைந்து சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. 3.5 அடி அகலமும், 3.5 உயரமும் கொண்டதாக இச்சிலை உள்ளது. சுமார் மூன்றடி புதையுண்ட நிலையில் காணப்படுகிறது. பீடத்தின் மேல் இச்சிலையை வெட்டவெளியில் நிறுவப்பட்டுள்ளது.
இச்சிலை ஜடாமகுடத்துடன் காட்சி தருகிறது. முகம் தேய்ந்த நிலையில் உள்ளது. 2 காதுகளிலும் வெவ்வேறு வகையான காதணிகள் உள்ளன. வலது காதில் பத்திரக் குண்டலமும் இடது காதில் மகர குண்டலமும் காணப்படுகின்றன. மேல் 2 கைகளில் ஏதோ ஒரு பொருளைத் தோளில் சுமந்து தூக்கிக் கொண்டுள்ளது. இது எலும்புக் கூடாக இருக்கும். சிவபெருமானின் வடிவங்களில் ஒன்று கங்காளர். இவர், எலும்புக் கூடுகளை ஏந்தியவர் என்று தேவாரப் பாடல்கள் கூறுகின்றன.
சிவபெருமான் கங்காளர் வடிவம் எடுத்ததற்குப் புராணக் கதை ஒன்று கூறப்படுகிறது. தேவலோகத்தில் பிரம்மனுடன் ஏற்பட்ட மோதலில், பிரம்மனின் 5 தலைகளில் ஒன்றைத் திருகி எறிந்து விடுகிறார். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் (பாவம்) பற்றியது. இதைப் போக்கும் பொருட்டு எடுக்கப்பெற்ற அவதாரமே கங்காளர் அவதாரம் எனக் கூறப்படுகிறது.
இவ்வூர் மக்கள், இச்சிலையை "ஒட்டன் கல்' என்று அழைக்கின்றனர். பாலாற்றில் வீசப்பட்ட இச்சிலையை இவ்வூர் மக்கள் தற்போது வழிபடுகின்றனர்.
இச்சிலை இடுப்புக்கு மேல் பகுதியில் இருந்து மட்டுமே தெரிவதால் பிற உருவங்களைக் காணமுடியவில்லை என்றார் அவர்.