சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தலைசிறந்த எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது அறிவித்ததற்கு எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்கால தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான எஸ்.ராமகிருஷ்ணன் பல சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், திரைக்கதைகளை இயற்றியுள்ளார். அவர் எழுதிய துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம் ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும், எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா ஆகிய வரலாற்று நூல்களும் புகழ் பெற்றவையாகும். மத்திய அரசு அவருக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவித்திருப்பது அவரின் புகழுக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது.
சாகித்ய அகாதெமி விருது பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தமைக்காக, எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மீண்டும் ஒரு முறை எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் கூறியுள்ளார்.