வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என போலீஸார் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயமாக தங்களது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் எனவும், அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போலீஸார் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை கடந்த நவம்பர் மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அந்த அறிவிப்பில் வாகன ஓட்டிகள், வாகனத்தின் பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம், வாகன தகுதிச் சான்று, வாகன காப்பீட்டுச் சான்றிதழ், வாகன புகை சான்று உள்ளிட்டவைகளின் அசலையோ அல்லது டிஜிட்டல் முறையிலோ வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.