மதுரை: ராஜிவ் கொலைக் குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பத்து நாட்கள் பரோல் வழங்கத் தயாராக இருப்பதாக, தமிழக அரசு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரில் ஒருவரான ரவிச்சந்தினை பரோலில் விடுவிக்க வேண்டுமென்று உத்தரவிடக் கோரி, அவரது தாயார் மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்
இந்த வழக்கு நீதிபதி சுப்பையா அமர்வு முன்னிலையில் செவ்வாயன்று விசாரணைக்கு வானத்தை. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பான உத்தரவு தற்போது ஆளுநரின் முன் பரிசீலனையில் உள்ளது. எனவே அவர்களை நீண்ட விடுப்பில் அனுமதிப்பது தொடர்பாக உடனே விரைந்து முடிவடுக்க இயலாது.
ஆனால் ரவிச்சந்திரன் விஷயத்தில் தகுந்த காரணங்களுடன் உரிய முறையில் அவரது தரப்பு விண்ணப்பித்தால், அவருக்கு பத்து நாட்கள் பரோல் வழங்க அரசு தயாராக இருக்கிறது.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுப்பையா, வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.