வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. காணொலிக் காட்சி மூலம் புதிய குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோவை உக்கடம் பகுதி-1 திட்டப் பகுதியில் 1,392 அடுக்குமாடி குடியிருப்புகள், உக்கடம் 2-ஆவது திட்டப் பகுதியில் 448 அடுக்குமாடி குடியிருப்புகள், மதுக்கரை திரு.வி.க.நகர் திட்டப் பகுதியில் 256 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இதேபோன்று, சென்னை கோயம்பேடு திட்டப் பகுதியில் உயர்வருவாய் பன்னடுக்கு மாடி குடியிருப்புகள், மதுரை வடக்கு வட்டம் சிலையனேரியில் 40 தனி வீடுகள் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பி.கே.வைரமுத்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.