மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவிடம் கட்ட அனுமதிக்கக் கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக
உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்கக்கூடாது. நினைவிடம் அமைத்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே மெரீனாவில் நினைவிடம் கட்ட அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கைவிடுவதாக தீர்ப்பளித்துள்ளது. எனவே ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை. மேலும் அவருக்கு நினைவிடம் கட்டுவது தொடர்பாக அரசு தன் அதிகார வரம்புக்கு உள்பட்டே முடிவு செய்துள்ளது. இந்த நினைவிடம் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றிடம் முறையாக அனுமதி பெற்று விதிகளுக்கு உள்பட்டே கட்டப்படுகிறது. இந்த கட்டுமானப் பணிகள் வரும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைய உள்ளது என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.