சென்னை: தமிழர்கள் உடம்பில் படர் தாமரை வேண்டுமானால் மலரும்; ஆனால் தமிழகத்தில் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்பதை வலியுறுத்தும் விதமாக, ' தமிழகத்தில் தாமரை மலரும்' என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பேசி வருகிறார்.
இந்நிலையில் தமிழர்கள் உடம்பில் படர் தாமரை வேண்டுமானால் மலரும்; ஆனால் தமிழகத்தில் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
வீர மங்கை வேலு நாச்சியாரின் 222-ஆவது நினைவு தினமானது சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் செவ்வாயன்று கொண்டாடப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் கூறியதாவது:
தமிழர்கள் உடம்பில் படர் தாமரை வேண்டுமானால் மலரும்; ஆனால் தமிழகத்தில் தாமரை மலராது.
காவிரி, பாலாறு என நாம் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். முதலில் அங்கெல்லாம் தண்ணீர் கொடுக்கச் சொல்லுங்கள். பிறகு பார்க்கலாம்.
பாஜக எப்போதும் தமிழர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவர்களை பொறுத்தவரை நாம் ஒரு ஓட்டு, அவ்வளவுதான்.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழர்களை அவர்கள் நடத்திய விதமே அதற்கு சாட்சி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.