தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக வி.சி.ராமேஸ்வரமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் சனிக்கிழமை வெளியிட்ட அரசாணை:
பள்ளிக் கல்வி இயக்குநராகப் பணியாற்றி வந்த ரெ.இளங்கோவன் வயது முதிர்வின் காரணமாக ஜூன் 30-ஆம் தேதி பிற்பகல் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூலை 1-ஆம் தேதி முதல் காலியேற்படும் பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்துக்கு நிர்வாக நலன் கருதி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் கூடுதல் திட்ட இயக்குநராகப் பணிபுரியும் வி.சி.ராமேஸ்வரமுருகனை பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது.
பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள வி.சி.ராமேஸ்வரமுருகன் கடந்த 2012-2013-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி இயக்குநராகவும், 2013-2014-இல் பள்ளிக் கல்வி இயக்குநராகவும், 2014-2016-இல் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் சனிக்கிழமை வரை அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் கூடுதல் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வந்தார். பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்புடன் கூடுதலாக பொது நூலக இயக்குநர் பொறுப்பை கவனித்து வருகிறார்.