இலங்கையால் சிறை பிடிக்கப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விசைப்படகு மீனவ சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை புதன்கிழமை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, அவர்கள் அளித்த கோரிக்கை மனு விவரம்:- டீசல் விலை, இலங்கை கடற்படை பிரச்னைகளால் எங்கள் தொழில் அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களைக் காக்க சரியான அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசால் 184 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அவை பராமரிக்கப்படாமல் அனைத்தும் முழுமையாகச் சேதமடைந்து பயனற்றுப் போய் விட்டன.
மேலும், படகுகளின் உரிமையாளர்கள் பிழைப்பின்றி கூலி வேலைக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. மீனவர்களின் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாமலும், உணவுக்கும், உடைமைக்கும் வழியில்லாமலும் தவித்து வருகிறார்கள். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கி உதவுவது போன்று, படகு உரிமையாளர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும்.
சிறையில் 16 மீனவர்கள்: கடந்த வாரத்தில் மட்டும் மூன்று படகுகளையும், 16 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். இந்த மூன்று படகுகளுடன் ஏற்கெனவே சிறைபடுத்தப்பட்டுள்ள படகுகளையும் மீட்டுத் தர வேண்டும். மேலும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு, முழுமையாகச் சேதம் அடைந்த படகுகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டுமென மீனவ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.