திருச்சி அருகே ஆம்னி பேருந்தில் கடத்திச் செல்லப்பட்ட 17.83 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளை இருவர் ஆம்னி பேருந்து மூலம் சென்னைக்கு கடத்திச் செல்வதாக மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்தது.
இதையடுத்து புதன்கிழமை நள்ளிரவு திருச்சி அருகே விராலிமலை அருகேயுள்ள டோல்கேட்டில் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்துகளை சோதனையிட்டனர். அப்போது, மதுரையிலிருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் பயணித்த இருவரிடமிருந்து 17.83 கிலோ எடையுள்ள, ரூ. 5.5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடமிருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் திருச்சி 1-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.