மதுரை: தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் நேரிட்ட காட்டுத் தீயில் சிக்கி படுகாயம் அடைந்த ஈரோட்டைச் சேர்ந்த இளம் பெண் திவ்யா சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணம் அடைந்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யாவுக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த திவ்யாவுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் விவேக் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த காட்டுத் தீயில் சிக்கி விவேக் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்த நிலையில், திவ்யா இன்று மரணம் அடைந்தார்.
விவேக் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல கடந்த வாரம் இந்தியா வந்துள்ளார். அடுத்த வாரம் இருவரும் வெளிநாடு செல்லவிருந்த நிலையில், மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற இடத்தில் இந்த துயர சம்பவம் நேரிட்டது.
திருமணமாகி ஓரிரு மாதங்களில் இளம் தம்பதி மரணம் அடைந்திருப்பது அவர்களது குடும்பத்தாரை மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது.