திமுகவின் நிர்வாகத்தை 4 மண்டலங்களாகப் பிரிக்க அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
வேலூர், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் புதன்கிழமை ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் ஸ்டாலின் பேசும்போது, மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் தெரியும் என்றும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.
4 மண்டலங்களாகப் பிரிப்பு: திமுகவின் நிர்வாகத்தை எளிமையாக்குவதற்கும், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏற்பட மாவட்ட அமைப்புகளில் மறு சீரமைப்பு செய்வதற்கும் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆஸ்டின் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
திமுகவில் தற்போது 65 மாவட்டங்கள் உள்ளன. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கும் இந்தக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், திமுகவின் நிர்வாகத்தை 4 மண்டலங்களாகப் பிரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தென்மண்டல அமைப்புச் செயலாளராக மு.க.அழகிரி இருந்து வந்தார். கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்ட பிறகு அந்தப் பகுதி காலியாகவே இருந்து வருகிறது. தற்போது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்களை அமைப்பாளர்களாக நியமிப்பதற்கும் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.