தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையிலிருந்து திங்கள்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, பொதுமக்கள் நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தேவைப்படும் பாடங்களைத் தவிர மற்ற பாடங்களில் இருந்து கேள்விகள் தமிழில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. அதனால் இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றிபெறும். பருவமழை காலங்களில் பரவி வரும் காய்ச்சல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக ஏற்படும் சேதங்களை தவிர்க்க அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றார்.