அரசு வழங்கிய இலவச டிவிக்களை எரிப்பது போன்ற காட்சி "சர்கார்' திரைப்படத்தில் இடம்பெறாதது ஏன்? என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியது:
தகுதி நீக்க எம்.எல்.ஏ.-க்கள் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளரை (சசிகலா) சந்திக்க வேண்டும் எனக் கேட்டுள்ளதால், அனைவரும் சேர்ந்து அவரைச் சந்திக்க திட்டமிட்டிள்ளோம்.
கடந்த 2011 -ஆம் ஆண்டில் விலையில்லா பொருள்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றை மக்கள் விரும்பி வாங்கிக் கொண்டனர்.
அதற்கு முந்தைய ஆட்சியில் இலவச டிவி கொடுத்தார்களே? அதையும் எரிப்பது போன்று "சர்கார்' திரைப்படத்தில் காட்சி இடம்பெற்றிருந்தால், நடுநிலையாக இலவசங்கள் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள் எனக் கருதலாம். "சர்கார்' வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட படம். கருத்துகளைச் சொல்வதற்காக எடுக்கப்பட்டதல்ல.
படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி அதற்கு விளம்பரம் கொடுக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பண மதிப்பிழப்பு: இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தோம்.
பண மதிப்பிழப்பு காரணமாக இன்னும் பாதாளத்துக்கு சென்றுள்ளோம். இது வளர்ச்சிக்கான திட்டமில்லை.
கருப்புப் பணம் எவ்வளவு ஒழிந்துள்ளது என்பதை அரசாங்கம்தான் சொல்ல வேண்டும் என்றார் டிடிவி தினகரன்.