ஓய்வூதியதாரர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழ்களை கருவூலங்களிலேயே அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களில் சிலர் பொதுத் துறை வங்கித் திட்டத்தின் மூலமாக, கடந்த ஆண்டு வரை வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர்.
இதனால் அவர்களுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டு வந்தன. அவர்களது சிரமங்களைக் குறைக்கும் வகையில், பொதுத் துறை வங்கித் திட்டத்தின் மூலமாக ஓய்வூதியம் பெறும் சுமார் 70 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் கருவூலத் துறை மூலமாக ஓய்வூதியம் வழங்கும் திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
என்ன செய்ய வேண்டும்?: இந்தத் திட்டத்தின் வாயிலாக அவர்கள், தமிழகத்திலுள்ள மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் அளிக்கும் அலுவலகம் மூலமாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
பொதுத்துறை வங்கித் திட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் கடந்த ஆண்டு வரை நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் தங்களது உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியம் பெற்று வந்த வங்கிகளில் அளித்து வந்தனர்.
தற்போது அவர்களின் அனைத்து பதிவேடுகளும் ஓய்வூதியம் அளிக்கும் கருவூலங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதால், இந்த ஆண்டுக்கான உயிர்வாழ் சான்றிதழை அவர்கள் தங்களது ஓய்வூதியம் பராமரிக்கப்படும் ஓய்வூதியம் அளிக்கும் அலுவலகம், சென்னை மற்றும் மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்களில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 -ஆம் தேதி வரை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.