முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் புதன்கிழமை (நவ.14) ஆஜராகுமாறு உளவுத் துறை ஜ.ஜி.சத்தியமூர்த்திக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
விசாரணை ஆணையத்தின் காலம் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்னும் பலரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால் ஆணையத்தின் காலத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசிடம் நீதிபதி ஆறுமுகசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, கடந்த அக்டோபர் 24-ஆம் தேதியில் இருந்து மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.
அழைப்பாணை: இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையின் இதயவியல் மருத்துவர் கார்த்திகேசன் திங்கள்கிழமையும் (நவ.12), "நமது அம்மா' நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ், பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கோத்தகிரி கிளை மேலாளர் அலோக் குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமையும் (நவ.13), தமிழக உளவுத் துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி புதன்கிழமையும் (நவ.14) ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் வியாழக்கிழமை அழைப்பாணை அனுப்பி உள்ளது.