பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழந்த கொடுமையை இந்த நாடு மறக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாட்டு மக்கள் அனைவரையும் நடுத்தெருவுக்குத் தள்ளிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு நிறைவடைந்துள்ளது.
வங்கிகளில் முடிவே இல்லாத நீண்ட வரிசையில் மக்களை நிற்க வைத்து அலைக்கழித்ததோடு, வங்கி வாசலிலேயே அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிரை இழந்த கொடுமையை இந்த நாடு மறக்காது.
அது மட்டுமா, லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பு பறிபோனதுடன், சிறு - குறு நிறுவனங்கள் மூடு விழா கண்டு, நாட்டின் பொருளாதாரமே பின்னோக்கி தள்ளப்பட்டது.
நாட்டின் அழிவுக்கு வழிவகுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர் என்று அவர் கூறியுள்ளார்.