கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சார வசதி பெற ஒரு வாரம் ஆகும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:
கஜா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளன. 1,100 பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிநீர், மின் விநியோகம் சீரமைப்பு பணிகள் முதற்பணியாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் மட்டும் 10,000 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மின்சாரம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை நகர் பகுதிகளில் முதல்கட்டமாக சீரமைப்பு பணிகளை முடித்து இன்றைக்குள் மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சார வசதி பெற ஒருவாரமாகும் என்று தெரிவித்தார்.