வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் மற்றும் கடல் சீற்றத்தால் மாமல்லபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. எனினும், மழையையும், கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள கடற்கரைப் பகுதிகளை சுற்றிப் பார்த்ததோடு, சிற்பங்களையும் கண்டு ரசித்தனர்.
கஜா புயல் அறிவிப்புக்கு முன்னதாகவே கடல் சீற்றமும், சூறாவளிக் காற்றும் வீசியதையடுத்து இரு வார காலமாக மாமல்லபுரம், கொக்கிலமேடு, தேவனேரி, வெண்புருஷம்குப்பம், சூளேரிகாட்டுக்குப்பம், புதுக்கல்பாக்கம், நெம்மேலி உள்ளிட்ட கடலோர மீனவ குப்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் பலத்த காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. எனினும், மாமல்லபுரத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி கடற்கரைக் கோயிலையும், அர்ஜுனன் தபசு, ஐந்து
ரதம் பகுதிகளில் உள்ள சிற்பங்களைக் கண்டு களித்தனர். இதனிடையே, மாமல்லபுரம் நகர்ப் பகுதியில் மழைநீர் வெளியேற வழியின்றி முக்கிய சாலைகளில் நீர் குளம் போல் தேங்கியது. இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்துடன் சாலைகளைக் கடந்து சென்றனர். கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவாக இருந்ததால் வியாபாரிகள் கடைகளை திறக்கவில்லை. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளான கடற்கரைக் கோயில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைப் பாறை, குடைவரை மண்டபப் பகுதிகள் ஆகிய இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியதோடு, சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் சறுக்கி விழும் நிலை உள்ளதுதால் தொல்லியல் துறையினர் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தினர்.