தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டேன்.
இதில் 2016 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி நரிக்குடி மருத்துவமனை முன்பு அனுமதியின்றி ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நரிக்குடி காவல் நிலையத்தில் என்மீது வழக்குபதிவு செய்யபட்டது. தேர்தல் நடத்தை விதிகள் எதையும் நான் மீறவில்லை.
எனவே 2016 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நரிக்குடி காவல் நிலையத்தில் என்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.