மழையைக் காரணம்காட்டி இடைத்தேர்தலைத் தள்ளி வைக்கலாமா என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: மழையைக் காரணம்காட்டி இடைத்தேர்தலைத் தமிழக அரசு தள்ளிப் போடுவது நாடகம். இதற்காகவா தேர்தலை ஒத்திவைப்பார்கள் என்பதுதான் என் கேள்வி. நிர்மலாதேவி விவகாரத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஆளுநர் பதவி விலகுவதுதான் அழகு. தன்னை நிரூபிக்கும் வரை அவர் பதவியில் இருக்கக்கூடாது. ஆளுநர் என்பவர் மிகவும் ஜாக்கிரதையாகவும் மரியாதையாகவும் பேச வேண்டும்.
சிலை கடத்தல் வெகுநாள்களாகவே நடந்து வந்துள்ளது. கோயிலில் இருப்பவர்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்திருப்பர். அவர்கள் அனுமதி இல்லாமல் இந்த கடத்தல் நடந்திருக்க வாய்ப்பில்லை. கோயிலுக்குச் சொந்தமான சிலைகள் நம்முடைய சொத்து. தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் அதனைப் பாதுகாக்க வேண்டும்.
"மீ டூ' இயக்கம் மூலம் எழும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு அதில் தொடர்புடையவர்கள்தான் பதிலளிக்க வேண்டும். இந்த இயக்கம் மூலம் பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றால் அது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது வெறும் பேச்சு மட்டும்தான் என்றார் கமல்ஹாசன்.