ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்கள் 7 பேரை காங்கிரஸ் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மோதல் தொடர்பாக சு.திருநாவுக்கரசர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது அழைப்பாளர்களாக இல்லாத கடல் தமிழ்வாணன், வில்லிவாக்கம் ஜான்சன், ஏ.வி.எம். ஷெரிஃப், பொன் மனோகரன், திருவொற்றியூர் பாஸ்கர் ஆகியோர் ஏற்கெனவே கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட முரளிதரன், சீனிவாசமூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து கூட்டத்துக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தனர்.
மேலும், கூட்டத்தின் நடவடிக்கைகளைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டனர். இதனால், கட்சியின் சட்ட விதிகளுக்குள்பட்டு அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஏழு பேரும் நிரந்தரமாக நீக்கப்படுகின்றனர். இவர்களோடு கட்சியினர் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றார்.