கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு, ஜூலை 30ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் தனது பண்ணை வீட்டில் இருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றான்.
பல கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் 108 நாட்கள் கழித்து, ராஜ்குமார் வீரப்பனால் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். மல்லு என்பவர் இறந்து விட்டார். ரமேஷ் தலைமறைவாகியுள்ளார்.
இதுதொடர்பான வழக்கு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 18 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வழக்கில் தொடர்புடையவர்களில் எஞ்சிய 9 பேரை இன்று ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கோபிசெட்டிபாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.