பணத்தை பாதுகாப்பாக அகற்றிய பிறகு வருமானவரித் துறையை தனது வீட்டில் சோதனையிட வருமாறு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அழைக்கிறார் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன், புதன்கிழமை களியக்காவிளை சந்தையில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்திற்கும், கேரளத்துக்கும் நுழைவு வாயிலாக களியக்காவிளை உள்ளது. இங்குள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த சந்தையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தும் எண்ணம் உள்ளது. நதிகள் இணைப்பு குறித்த பாஜகவின் தேர்தல் அறிக்கையை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருப்பது மன நிறைவாக உள்ளது.
தனது வீட்டில் விரைவில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையிடக்கூடும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது, பணத்தை இடம் மாற்றியபிறகு வருமானவரித் துறையினரை சோதனைக்கு அழைப்பது போல உள்ளது. கேரள சட்டப்பேரவையில் 13 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த முன்னாள் நிதியமைச்சர் கே.எம். மாணி ஒரு பண்பட்ட அரசியல்வாதி. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.