திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் தலைமைக் காவலரின் தபால் வாக்கை பெற்றுச் சென்ற திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
திசையன்விளையைச் சேர்ந்தவர் திமுக முன்னாள் நகரச் செயலர் ஜெயராஜ் (59). திசையன்விளை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஜெயராஜை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தியபோது, அவர் நிற்காமல் சென்றுள்ளார்.
இதையடுத்து, பறக்கும் படையினர் அவரை துரத்திச் சென்று பிடித்து, அவரது வாகனத்தை சோதனையிட்டனர். அதில், உவரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் அந்தோணி சேகர் என்பவரது தபால் வாக்கு, திமுக தேர்தல் சின்னம் பொறிக்கப்பட்ட வாக்குச் சீட்டு, ரூ. 7 ஆயிரம் ரொக்கம் அவரிடம் இருந்தது தெரியவந்தது.அவற்றை கைப்பற்றிய பறக்கும் படையினர் ஜெயராஜை திசையன்விளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, ஜெயராஜிடம் தபால் வாக்கை கொடுத்த திசையன்விளை ஆர்.சி. தெருவைச் சேர்ந்த தலைமைக் காவலர் அந்தோணி சேகர் மீதும் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.