லோக் ஆயுக்த அமைப்பின் உறுப்பினர்களுக்கான பணி நியமன ஆணையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (திங்கள்கிழமை) வழங்கினார்.
கடந்த 2018 ஜூலை 9-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்த மசோதா நிறைவேற்றப்பட்டது. லோக் ஆயுக்த சட்டம் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினர்களை நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, உறுப்பினர்கள் தேர்வை மார்ச் 13 ஆம் தேதி நிறைவு செய்தது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி. தேவதாஸ் லோக் ஆயுக்த அமைப்பின் தலைவராகவும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே. ஜெயபாலன், ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதித்துறை உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்குரைஞர் கே. ஆறுமுகம் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், லோக் ஆயுக்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான பணி நியமன ஆணையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி. தேவதாஸிடம் இன்று வழங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே. ஜெயபாலன், ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நீதித்துறை உறுப்பினர்களுக்கான நியமன ஆணையை பெற்றனர்.