லோக் ஆயுக்த தலைவராக நீதிபதி பி.தேவதாஸ் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். இதற்கான நியமன உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.
தமிழ்நாடு லோக் ஆயுக்த தலைவராக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, தேவதாஸ் தேர்வு செய்யப்பட்டார். நீதித்துறை உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜாராம், கோவை மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் நீதித் துறை அல்லாத உறுப்பினர்கள் இரண்டு பேரின் நியமனத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, லோக் ஆயுக்த தலைவராக நீதிபதி தேவதாஸ், நீதித் துறை உறுப்பினர்கள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திங்கள்கிழமை பொறுப்பேற்றனர்.
இதற்கான நியமன உத்தரவுகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மூன்று பேருக்கும் அளித்தார். ஆளுநர் மாளிகையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா ஆகியோர் பங்கேற்றனர்.