ராஜபாளையத்தில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் வியாழக்கிழமை காவி வண்ணத்தை ஊற்றிச் சென்றதால் பதற்றம் நிலவியது.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பெரியார் சிலை உள்ளது. இந்த சிலையின் மீது மர்ம நபர்கள் சிலர் காவி வண்ண பெயிண்ட்டை ஊற்றிச் சென்றனர்.
இதை அறிந்த திக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் சிலை முன்பாக கூடினர். தகவல் அறிந்து வந்த டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் உள்ளிட்ட காவல் துறையினர் அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் காவல் துறையினர் கேட்டுக் கொண்டதை அடுத்து உடனடியாக, சிலையில் இருந்த காவி பெயிண்ட் அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திராவிடர் கழக மாவட்டத் தலைவர் திருப்பதி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.