தருமபுரி மக்களவைத் தொகுதியில் 10 வாக்குச் சாவடி மையங்களில், மறுவாக்குப் பதிவு கோரிய விவகாரத்தில், விசாரணை அறிக்கை மாநிலத் தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் நத்தமேடு, ஜாலிபுதூர், கேத்திரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட 10 வாக்குச் சாவடி மையங்களில், வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டு ஒரு நபரே பல வாக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், அங்கு நேர்மையான முறையில் வாக்குப் பதிவு நடைபெறாததால் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.
அதேபோல, திமுக சார்பிலும், மாநில தலைமை தேர்தல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கையை மாநில தேர்தல் அலுவலர் கோரியிருந்தார். இதனடிப்படையில், பொதுப் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சு.மலர்விழி ஆகியோர், புகாருக்குள்ளான வாக்குச் சாவடி மையங்களில் 17 ஏ ஆவணங்கள், தொடர்புடைய ஆவணங்களை சனிக்கிழமை ஆய்வு செய்தனர். மேலும், வாக்குச் சாவடி மையத்தில் பணிபுரிந்த அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பான அறிக்கையை, மாநில தேர்தல் அலுவலர் சத்தியபிரதசாகுவுக்கும், தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.