உதகையில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியிலிருந்து தொடர்ந்து 3 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. உதகையில் கடந்த ஒரு வாரமாக மழையே இல்லாமல் பகலில் கடும் வெயில் நிலவி வந்தது.
இதனால், ஏப்ரல் மாதத்தில் சீசன் பொய்த்துவிடுமோ என்ற அச்சம் இருந்த நிலையில், சுமார் ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் உதகையில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது.
தொடர்ந்து 3 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இந்த திடீர் மழை அனைத்து தரப்பினரிடமும், குறிப்பாக, உதகைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த மழையின் காரணமாக உதகையில் திங்கள்கிழமை மாலையில் வெப்பம் வெகுவாக குறைந்து குளிர்ந்த சூழல் நிலவியது.