மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளருக்கு, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: என் மகனை சிலர் தாக்கிய விவகாரத்தில், அவர்கள் மீது நடவடிக்கை கோரி திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
புகாரை முறையாக விசாரிக்காத காவல் ஆய்வாளர் சுதாகர், என்னை தகாத வார்த்தையால் பேசியதுடன், இனி ஒரு முறை காவல் நிலையத்துக்கு வந்தால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டினார். எனவே, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
ரூ.50 ஆயிரம் அபராதம்: இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக பாஸ்கருக்கு 2 மாதத்துக்குள் தமிழக அரசு வழங்கிவிட்டு, அந்தத் தொகையை காவல் ஆய்வாளர் சுதாகரிடம் இருந்து வசூல் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டார்.
மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அவர் பரிந்துரைத்துள்ளார்.