தமிழகத்தில் உள்ள பவானி, அமராவதி, வைகை, தாமிரவருணி ஆகிய நான்கு நதிகளையும் சுத்தப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் அரசுப் பொருள்காட்சியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியது: காவிரி-கோதாவரி நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற கடும் முயற்சி எடுத்து வருகிறோம். இத் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கி இருக்கிறது.
இதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 125 டி.எம்.சி. நீர் கிடைக்கும். கங்கை நதி நீரைச் சுத்தப்படுத்துவதைப் போல தமிழகத்தின் ஜீவநதியான காவிரி நதியை மாசு இல்லாத நதியாக சுத்தப்படுத்த பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை ஏற்கும் வகையில், காவிரி நதியைச் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் கோரிக்கையை ஏற்ற பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள பவானி, அமராவதி, வைகை, தாமிரவருணி ஆகிய நான்கு நதிகளிலும் மாசுபடுத்தப்பட்ட நீரை சுத்தப்படுத்திட நடவடிக்கை எடுப்போம்.
நிலத்தடி நீரை உயர்த்திடும் வகையில் குடிமராமத்துத் திட்டத்தில் பொதுப் பணித் துறையின் 14,000 ஏரிகளை தூர்வாரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், 2017 -இல் ரூ.100 கோடியில் 1,519 ஏரிகளும், 2017-18 -ஆம் ஆண்டில் 1,511 ஏரிகள் ரூ.328 கோடியிலும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது 2018-19 -ஆம் ஆண்டில் ரூ.500 கோடியில் 1,829 ஏரிகளும் குடிமராமத்துத் திட்டத்தில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே சேலத்தில் முதல் முதலாக விமான நிலையத்திற்கு இணையான வசதிகள் கொண்ட பேருந்து முனையம் அமைக்கப்பட இருக்கிறது என்றார்.