சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறிய அளவிலான செயற்கைக்கோளைத் தயாரித்து விண்ணில் ஏவும் போட்டியில் தேர்வு பெற்று சாதனை படைத்தனர்.
விக்ரம் சாராபாய் 100-ஆவது பிறந்த நாளையொட்டி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறிய அளவிலான செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் ஏவும் போட்டியை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு அறிவித்தது.
இந்தப் போட்டியில், சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி செயலர் எஸ்.அருள்மொழிச்செல்வன் வழிகாட்டுதலுடன், மாணவர்கள் தமிழ்பாரதி, பாலமுருகன், ராகுல், ஜெயந்த் நாராயணன் ஆகியோர் பங்கேற்று சிறிய அளவிலான செயற்கோளைத் தயாரித்தனர்.
மாநில அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆறுமுக நாவலர் பள்ளி மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள் தேர்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:
செயற்கைக்கோளில் பேனாவில் ஊற்றும் மையை ஒரு குப்பியில் நிரப்பி விண்ணுக்கு அனுப்பி இருக்கிறார்கள். வான்வெளி சூழலில் மையில் ஏற்படும் மாற்றத்தை ஆராய்வதன் மூலம் நமக்கு இரு வகையான நன்மைகள் கிடைக்கும். விண்வெளியில் பயன்படுத்த பேனா இல்லை எனவும், புவிஈர்ப்பு விசையில்லாத காரணத்தால் பேனாவை பயன்படுத்த முடியவில்லை. இதன்மூலம் விண்வெளியில் எழுதும் வகையிலான பேனா தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தெரிய வரும், மற்றொன்று, அந்த மையில் ஏற்படும் படிக அளவிலான மாற்றத்தைக் கொண்டு விண்வெளி ஊர்தியின் பாகங்களைத் தயாரிக்க இயலும்; இந்தப் பாகங்கள் விண்ணில் மிதக்காமல் கரைந்து போகச் செய்வதால், விண்வெளி மாசு கட்டுப்பாட்டை குறைக்க இயலும் என அவர்கள் தெரிவித்தனர்.
செயற்கைக்கோள் கடந்த 11-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், சிறுசேரியிலிருந்து, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீமதிநேசன் முன்னிலையில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
நிகழ்வில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) விஞ்ஞானி டில்லிபாபு பங்கேற்று போட்டியில் தேர்வான மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.